விழுப்புரம் செப், 18
மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்டேரிப்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் புனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, பழுதடைந்த தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை வர்ணம்பூசி பராமரிப்பது, சிமெண்டு சாலை, வடிகால் வாய்க்கால், காங்கிரட் தளம், சிறு பாலம், தடுப்பு சுவர் அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் அமைத்தல், தானிய உலர் களம் அமைத்தல் உள்ளிட்ட 63 வளர்ச்சி திட்டப் பணிகளை ரூ.1 கோடியே 3 லட்சத்து 84 ஆயிரம் செலவில் மேற்கொள்வது ஆகிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துவேல் நன்றி கூறினார்.