திண்டுக்கல் செப், 18
கர்நாடக மாநிலம் சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா என நாடு முழுவதிலும் இருந்து 1,039 பேர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தொடர்ந்து 4 நாட்கள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடி சாதனை படைத்தனர்.
இதில், பழனியை அடுத்த புதுஆயக்குடியை சேர்ந்த கார்த்திகேயா என்ற மாணவரும் கலந்துகொண்டு சாதனை படைத்தார். மேலும் அவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து சாதனை படைத்த மாணவருக்கு, அவரது பெற்றோர் சிவராமன்-தாமரை செல்வி, பயிற்சியாளர்கள் கரிகாலன், அரவிந்தன் மற்றும் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் என பலரும் பாராட்டினர். மேலும் சாதனை படைத்த மாணவனை, பழனி காவல் துணை கண்காணிப்பாளர் சிவசக்தி பாராட்டினார்.