Spread the love

தஞ்சாவூர் செப், 15

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் முருகனின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்தும் காணிக்கைகள் அவ்வப்போது திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

அந்தவகையில் 45 நாட்களுக்கு பிறகு கோவிலில் உள்ள 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் எண்ணப்பட்டன. இதன் முடிவில் ரூ.21 லட்சத்து 24 ஆயிரத்து 811 ரொக்கமும், 60 கிராம் தங்கம், ஒரு கிலோ 550 கிராம் வெள்ளி, ஆகியவை கோவிலுக்கு வருவாயாக கிடைத்திருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கும்பகோணம் சாந்தா, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் உதவி ஆணையர் உமாதேவி, கோவில் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் கோவில் ஊழியர்கள், கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் ஆகியோர் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *