காஞ்சிபுரம் செப், 8
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் நேற்று பரந்தூர், ஏகனாபுரம், மங்கலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தும் விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களை சந்திந்த பாமக. கவுரவ தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது:-
பெரும்பாலான மக்கள் நிலம் விமான நிலையம் அமைவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இதே போன்று அருகிலுள்ள கிராமங்களில் தொழிற்சாலைகளுக்காக நிலம் எடுக்கப்பட்டது. மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை வேலை வழங்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களிடம் கேட்டறிந்த கருத்துகள் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் மூர்த்தி, பொருளாளர் திலகவதி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக. செயலாளர் மகேஷ் குமார் மாவட்ட தலைவர் உமாபதி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சக்தி கமலம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.