கரூர் மே, 8
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த பனங் கிழங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சர்ச் கார்னர், மார்க்கெட், லைட்ஹவுஸ் கார்னர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், கோவை ரோடு போன்ற பகுதிகளில் அந்தந்த சீசன்களில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான பழங்களும், கிழங்கு வகைகளும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள் மற்றும் கிழங்கு வகைகளை அதிகளவு வாங்கிச் சென்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஈரோடு, திருச்செந்தூர் போன்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் பனங்கிழங்கு வகைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த வகை கிழங்குகள் ஒரு சில மாதங்கள் மட்டுமே இந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் என்பதால் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கட்டு ரூ. 50 என்ற அடிப்படையில் வியாபாரிகள் பனங் கிழங்கினை விற்பனை செய்து வரும் நிலையில், இதன் தேவை கருதி அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.