பள்ளிப்பட்டு மே, 8
திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உத்தரவின்பேரில் ஆர்.கே.பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். முகாமில் ஆர்.கே.பேட்டையில் பள்ளி வளாகங்கள் மற்றும் காலிமனைகளில் கிடந்த தேவையற்ற டயர்கள், பொருட்களை அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட மலேரியா அலுவலர் மதியழகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.