தேனி மார்ச், 17
தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருப்பூர் பேருந்துகள் நிற்கும் பகுதியில் இருந்து சிப்கோ செல்லும் பாதையோரம் ஒரு மரத்தில் ஆண் பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு 45 வயது மதிக்கத்தக்கவர், ஒரு மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அவர் சிவப்பு நிற டி-சர்ட், நீல நிற கைலி அணிந்து இருந்தார். இடது கையில், பா.மகேஸ்வரி என்ற பெயரை பச்சை குத்தியிருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.