Spread the love

மதுரை அக், 13

திருமங்கலம் தாலுகா வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் புரட்டாசி பொங்கல் சிலை எடுப்பு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் பக்தர்கள் தாங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அதை சிலையாக வடித்து தலையில் தூக்கியபடி ஊர்வலமாக வந்து கோவிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இதற்காக ஆடிப்பெருக்கு முதல் வாகைகுளத்தில் உள்ள கண்மாயில் உள்ள களிமண்ணை கொண்டு சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோவிலில் புரட்டாசி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிலைகளை சுமந்து செல்லும் சிலை எடுப்பு திருவிழா நடைபெற்றது. வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மேலும் சிலை எடுப்புவிழாவில் பக்தர்கள் தாங்கள் வேண்டியதை நிறைவேறியதால் வேண்டுதலுக்கு ஏற்ப சிலைகளை வடிவமைத்து தங்களது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். குறிப்பாக தாங்கள் வேண்டிக்கொண்டு நிறைவேற்றிய ஆசிரியர், ராணுவவீரர், திருமணம் நடத்தல், டிராக்டர், வீடுகள், ஆடு, மாடுகள் மற்றும் அய்யனார், கருப்பசாமி தெய்வங்களின் சிலைகளை பக்தர்கள் சுமந்து வந்து கோவிலில் வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *