நாமக்கல் அக், 12
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளை மறுநாளும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் மழைக்காலங்களில் இடி, மின்னல் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இடி தாக்குதலில் இருந்து கால்நடைகளை காக்க பண்ணையாளர்கள் கால்நடைகளை மழை வரும் நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. மேலும் மந்தையாக மேயும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை மின்னல் தாக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே கால்நடைகளை முள்கம்பி வேலி, மின்கம்பங்கள் அல்லது மரங்களின் அருகில் கட்டுவதை தவிர்க்க வேண்டும். கால்நடை கொட்டகைகளுக்கு அருகில் இருக்கும் மரங்கள் வேரோடு சாய்ந்து அல்லது கிளைகள் முறிந்து கொட்டகையின் மேல் விழுவதை தவிர்க்க மரக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.