மதுரை அக், 8
மதுரையில் ஆம்னி பேருந்து உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் மதுரை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் முருகேசன். கடந்த மாதம், சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அந்த பஸ், ஒத்தக்கடை பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுனர் மீது ஒத்தக்கடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.
மேலும் பேருந்தை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். ஆம்னி பேருந்து உரிமையாளரிடம் காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
அதன்பேரில், மதுரை சரக காவல் துறை துணை தலைவர் பொன்னி விசாரணை நடத்தினார். விசாரணையில் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆம்னி பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் ஆய்வாளர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக காவல் துறை துணை தலைவர் பொன்னி உத்தரவிட்டார்.