கோயம்புத்தூர் அக், 6
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு ரூ.2.45 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு அடிக்கடி தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க அதிகாரிகள் கண்காணித்து வருவதுடன், கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்கின்றனர்.
இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் பயணிகள் சிலர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை வந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த 6 பேரை பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதுடன், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவர்கள் உள்ளாடைகள், பேன்ட், பாக்கெட் ஆகியவற்றில் 5.6 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2.45 கோடி மதிப்பிலான 5.5 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.