புதுடெல்லி அக், 1
கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26% அதிகமாக வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 7-வது முறையாக 1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
மேலும் செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடியில், மத்திய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியும் மாநில ஜிஎஸ்டி ரூ. 31,813 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடியும் (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ.41,215 கோடி உட்பட) வசூலாகியுள்ளது. மேலும் செஸ் வரி ரூ. 10,137 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 856 கோடி உட்பட) வசூலாகியுள்ளதாக அமைச்சகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.