கடலூர் செப், 26
கடலூரில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16-வது மாநில மாநாட்டையொட்டி பாலியல் வன்முறை, போதை பழக்கத்திற்கு எதிராக கடலூரில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கடலூர் டவுன்ஹால் அருகே இருந்து தொடங்கிய இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை, 10-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். இந்த போட்டி சில்வர் பீச் சாலை, வண்ணாரப்பாளையம் வழியாக சென்று கடலூர் சில்வர் பீச்சை சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் தேன்மொழி வரவேற்றார். மாவட்ட தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவி, குடியிருப்போர் சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.