கோயம்புத்தூர் செப், 24
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் நாடுமுழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கேரளாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கேரளாவில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
மேலும் முழு அடைப்பு காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை கோவையில் இருந்து டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாளையாறு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த கோவைக்கு வந்த கேரள மக்கள், டவுன் பேருந்துகள் மூலம் வாளையாறு சோதனை சாவடி சென்றனர்.
பின்னர் அவர்கள் சோதனை சாவடியை கடந்து தங்கள் வீடுகளுக்கு அங்கிருந்து நடந்து சென்றனர். கேரளாவில் ஆட்டோ மற்றும் ஜீப்களும் ஓடவில்லை என்பதால் பொருட்கள் வாங்க கோவை வந்தவர்கள், வாளையாறு சோதனை சாவடியில் இருந்து அந்த பொருட்களை தங்கள் தலைமீது வைத்து சுமந்தபடி நடந்து சென்றது பார்க்க பரிதாபமாக இருந்தது.