வேலூர் செப், 7
கே.வி.குப்பம் தாலுகா கீழ்விலாச்சூர் துணை சுகாதார நிலைய வளாகத்தை ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகள் ஏதாவது இருந்தால் தெரிவிக்கும்படி ஆட்சியரே ஒரு சிலரை அழைத்து கேட்டார். கீழ் விலாச்சூர் ஜம்பு ஏரியின் மதகு வழியாக வரும் நீர் பாசன கால்வாய் ஆக்ரமிப்பில் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றி உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
அப்போது ஆண்கள், பெண்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்ட முதியோர்கள்,தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு ஆட்சியரை சூழ்ந்து முற்றுகையிட்டனர். உடனடியாக அதிகாரிகளை அழைத்து அவர்களுக்கு உதவித் தொகை கிடைக்க ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியின் போது திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன், துணை மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராமன், வட்டாட்சியர் கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபி, கல்பனா, ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் மாலாமார்க்கபந்து, ஜெயாமுருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன், ஜெயந்தி, ஊராட்சி செயலாளர்கள் விஸ்வநாதன், பழனி உள்பட பலர் உடனிருந்தனர்.