விருதுநகர் செப், 6
விருதுநகரில் வருகிற 15 ம்தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்குகிறார். முப்பெரும் விழா விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பட்டம் புதூர் கலைஞர் திடலில் திமுக முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா வருகிற 15 ம்தேதி நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் பரிசு வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சி பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கப்படுவதுடன், விருது வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட செயலாளர்களான அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன் , தங்கபாண்டியன், கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.