கோவை செப், 5
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அவரை சித்திரவதை செய்யும் நோக்கில் செக்கு இழுக்க வைக்கப்பட்டார். அவர் இழுத்த செக்கு அங்கு உள்ள சிறை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் விழா கோவை மத்திய சிறையில் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் அவருடைய மார்பளவு சிலை, உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஆட்சியர் சமீரன், கோவை சிறைத்துறை காவல் தலைமை இயக்குனர் சண்முகசுந்தரம், சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வ.உ.சிதம்பரனார் செக்குக்கு மரியாதை செலுத்தினர்.