சென்னை செப், 5
இன்று ஆசிரியர் தினத்தையொட்டி, சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது பண்டைய இந்தியப் பாரம்பரிய மரபாகும். ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். சுதந்திர இந்தியாவின் பெருவிழாக் காலத்தின் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் விரிவான எழுச்சிக் காலமாகும். இத்தருணத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.