துபாய் டிச, 10
முஹம்மத் பின் ராஷித் அரசு கண்டுபிடிப்பு மையம் மற்றும் முஹம்மது பின் ராஷித் நிதியகம் இணைந்து கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடத்திய இளம் மாணவ மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் பல்கலை கழக அளவில் நடந்த இறுதி சுற்றில் தமிழக மாணவி ரீம் செய்யது அபுதாஹிர் தலைமையிலான குழு முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்தியது.
அதற்கான பரிசு தொகை முப்பதாயிரம் திர்ஹம் காசோலை தமிழக மாணவி ரீம் அபுதாஹிர் குழுவிற்கு முஹம்மது பின் ராஷித் கண்டுபிடிப்பு மையத்தின் சார்பில் மத்திய திட்டமிடல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் மேதகு ஹுதா அல் ஹாஷ்மி அவர்களால் 15/11/2024 வெள்ளி அன்று வழங்கப்பட்டது.
ரீம் அபுதாஹிர் குழுவினரின் புதிய கண்டுபிடிப்பு, மாணவர்கள் சிரமமில்லாமல் இலகுவாக கல்வி கற்கவும் , பாடத்தின் பொருள் உணர்ந்து படிக்கும் முறையிலும், ஆசிரியர் மாணவர் பெற்றோர் ஆகியோரை தொடர்பு கொள்ளும் முறையிலும்,அதிக மதிப்பெண் ஈட்ட உதவும் விதமாகவும் சிந்தனை அறிவை செம்மைப்படுத்தும் செயற்கை நுண்ணறிவு அறிவியல் தளத்தில் இயங்கும், ஒரு செயலியாகும்.
நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினர் தங்களது புதிய கண்டுபிடிப்பு மாதிரிகளை தேர்வுக்காக சமர்ப்பித்த நிலையில் ரீம் அபுதாஹிர் தலைமையிலான குழுவின் “நெக்சி லேர்ன்”இறுதி கட்டத்தில் அமீரக அரசால் தேர்வு செய்யப்பட்டு அங்கீகாரமும் ஊக்க தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேதகு ஷேக் அல் காசிமி அவர்களின் கல்வி உதவி பெறும் மாணவியான ரீம் அபுதாஹிர் அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மருத்துவ கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவி ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர். ஏற்கனவே, கல்வியில் அதிக மதிப்பெண் பெற்றமைக்காக துபாய் அரசால் கோல்டன் விசா என்ற உயரிய விசாவும் வழங்கப்பெற்று கவுரவிக்க பட்டவர் ஆவார்.
இவரின் தந்தை செய்யது அபுதாஹிர் துபாயில் சொந்தமாக நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரைப்போலவே, இவரின் இருசகோதரிகளும் அமீரகத்தின் முதல் மாணவி மற்றும் கோல்டன் விசா பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.