பெரம்பலூர் ஆகஸ்ட், 17
பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு, குரும்பலூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, டோல்கேட் அருகே தாளக்குடி-வாளாடியில் இருந்து கொள்ளிடம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கொள்ளிடத்தில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் குடிநீர் கிணறுகள் மூழ்கியுள்ளன. இதனால் பெரம்பலூர் நகருக்கு கடந்த சில வாரங்களாக கொள்ளிடம் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனை கண்டித்தும், பெரம்பலூர் நகராட்சி மூலம் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதை, வாரத்திற்கு இருமுறை என குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூரில் அதிமுக நகர செயலாளர் ராஜபூபதி தலைமையில் அக்கட்சியினர் நகராட்சி ஆணையர் மனோகரனிடம் நேற்று மனு கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு அதிமுக.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்து, ஆத்தூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.