Spread the love

ஆகஸ்ட், 15

நமது இந்திய நாடு இன்று 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது இந்நிலையில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் சிலவற்றின் வரலாறுகளை இப்போது காண்போம்.

‘பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு’ என்றார் நம் தமிழ்க்கவி பாரதி. நம் பாரத திருநாட்டில் மக்கள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடந்தனர். அவர்களை மீட்கவும், இந்தியா சுதந்திரம் அடையவும் போராடிய தியாக செம்மல்களில் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர். பூலித்தேவன் என்ற பாளையக்காரன் தனக்குரிய நெற்கட்டான் செவ்வல் பகுதியை முற்றுகையிட்ட ஆங்கிலேயரை எதிர்த்து வென்றான். இதுவே விடுதலைப் போரின் முதல் முழக்கமாகும்.

வானம் பொழியுது, பூமி விளையுது, வெள்ளையருக்கு ஏன் வரி தரவேண்டும் என வீர முழக்கமிட்டான் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப் போலவே வீரன் ஊமைத்துரை, வேலுநாச்சியார், சிவகங்கை மருதுசகோதரர்கள், தீரன் சின்னமலை முதலானோர் ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உரிமைப்போர் தோற்றாலும், அவர்கள் உண்டாக்கிய விடுதலை உணர்வு வளர்ந்தது.

இந்திய நாட்டின் விடுதலைக்கு சுதந்திரமே எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்டு போராட்டத்தில் பங்கேற்றவர் பாலகங்காதர திலகர். அவருடைய வழியை தீவிரமாக பின்பற்றி ஆங்கிலேயரை தமிழகத்தில் எதிர்த்தவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவரை சிறையில் அடைத்தனர். அங்கு அவர் செக்கிழுத்தார். ஆங்கிலேயர்களின் சித்ரவதைக்கு அவர் ஆளாகினார். கல்லுடைத்தார், கசையடிப்பட்டார். ஆயினும் விடுதலைக்கு தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
நாட்டு பற்றை துறக்காத துறவி சுப்பிரமணிய சிவா ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு பல இன்னல்களை அனுபவித்தார். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. ஆனால் நோய் கொடுமையை கண்டுகொள்ளாமல் விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர் சுப்பிரமணிய சிவா.

நாம் இருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்- அது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் என்றும்
சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்- இனி அஞ்சிடோம்
என்றும் முழங்கி, மூலையில் முடங்கி கிடந்தவர்களை தட்டியெழுப்பினார் நம் தேசியக்கவி பாரதியார்.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற ராமலிங்கம் பிள்ளையின் பாடல் தமிழக விடுதலை வீரர்களின் வேதமந்திரமாக பாடப்பட்டது.

ஆஷ் என்ற ஆங்கில அதிகாரியை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கிவிட்டு தன்னையும் மாய்த்து கொண்டார் வாஞ்சிநாதன்.

ஏந்திய மூவர்ண்ண கொடியை தனது உயிரே போனாலும் கையில் பிடித்தபடி இறந்த திருப்பூர் குமரன்.

காந்தியின் அறவழியில் மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், செயல்வீரர் காமராஜர், வ.வெ.சு. அய்யர், முத்துராமலிங்க தேவர், சத்தியமூர்த்தி போன்ற பலரும் விடுதலை போராட்டத்தில் தம்மை இணைத்து கொண்டு இன்னல் பல ஏற்றனர். இந்த தியாகிகளின் தீரமிக்க தொண்டினால் விடுதலை போரில் தமிழக வீரர்கள் ஆற்றிய பங்கு இன்றும் நம் மனதில் நிலைத்து நிற்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த எண்ணற்ற தியாக சீலர்கள் இம்மண்ணின் விடுதலைக்காக தம் உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். அவர்கள் பெற்று தந்த விடுதலையை காப்பது மண்ணின் மைந்தர்களான நமது கடமையாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது இந்தியநாட்டில் அனைத்தும் மதத்தினரும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வரலாறுகளை இப்போது காண்போம்.

சுதந்திரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு:

தேவர்துண்டியில் திதஸ் என்ற திதுஸ்ஜி:

கடந்த 1930-ம் ஆண்டு நடந்த தண்டியாத்திரையில் பங்கேற்ற ஒரே கிறிஸ்தவர் திதுஸ்ஜி ஆவர். அகமதாபாத் அருகே காந்தியின் சபர்மதி பால் திட்டத்தில் அரசின் செயலாளராக திதுஸ்ஜி இருந்துள்ளார். பழைய 500 ரூபாய் நோட்டில் காந்தியின் தண்டியாத்திரை போராட்டத்தில் திதுஸ்ஜி படம் அமைந்திருக்கும். திதுஸ்ஜி என்ற பெயர் காந்தியால் வழங்கப்பட்டது.

ராமசாமி பால்:

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, உப்பு சத்தியாகிர போராட்டத்தில் ஈடுபட்டவர். அப்போது ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் வெளியே வந்து, திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியை நிறுவினார்.

உபாத்யாயே பிரம்மபந்தவ்:
பத்திரிகையாளராகவும், சுதந்திரப் போராட்டவீரராகவும் இருந்து, பின்னர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். சந்தியா நாளேட்டின் ஆசிரியராக உபாத்யாயே இருந்தார்.

காளி சரண் பானர்ஜி: மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த காளி சரண் பானர்ஜி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினரான பானர்ஜி வேதாந்தா அடிப்படையிலான கிறிஸ்தவ தத்துவவியல் நிறுவனத்தை நிறுவியவர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது தேசவிரோத சட்டத்தின் காளி சரண் பானர்ஜி கைது செய்யப்பட்டார்.

அக்கம்மா செரியன்:

கேரள மாநிலம் திருவாங்கூரின் ஜான்சி ராணியாக அறியப்படுவர் அக்கம்மா செரியன். சுதந்திரப் போராட்ட காலத்தில் தனது ஆசிரியர் பணியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட போது, தம்பனூரில் இருந்து, கவுதியார் அரண்மனை வரை மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியவர் அக்கம்மா செரியன் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரப்பா:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரப்பா, சத்தியாகிரகப் போராட்டம், சுதந்திரப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். காந்தியின் தண்டியாத்திரை தொடங்கியபோது, யங் இந்தியா பத்திரிகையில் தொடர்ந்து புரட்சிகரமான கட்டுரைகள் எழுதியவர் குமரப்பா. இதற்காக ஆங்கிலேயர்களால் சிறைக்கு அனுப்பப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில்பங்கேற்று குமரப்பா சிறை சென்றார். கிறிஸ்தவரான குமரப்பா, ஏராளமான கிறிஸ்தவர்களை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட தூண்டுகோலாக இருந்தார்.

மேலும் ஜோஹிம் ஆல்வா, சார்லஸ் ப்ரீ ஆன்ரூஸ், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பிடத்தக்க தலைவர்கள் ஆவர்.

சுதந்திரப் போராட்டத்தில்
இஸ்லாமியர்களின் பங்கு:

நமது இந்திய தேச கொடியை வடிவமைத்த குழுவில் இடம் பெற்றிருந்தவர்தான் சுரையை தயாப்ஜி என்ற இஸ்லாமியப் பெண்மணி. இவர் ஹைதாராபாத்தைச் சேர்ந்தவர். தேசியக் கொடியில் இருந்த ஆரஞ்சு நிறத்தையும், அசோகச்சக்கரத்தையும் இவர் வடிவமைத்தார்.

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாகப் போரில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

‘இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்;

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

வரி தர மறுத்த வரிப்புலிகள்:

இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடினார் பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று யூகிக்க முடிகிறது.

கதி கலக்கிய கான் சாஹிபு:

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஷா அப்துல் அஜீஸ்:

இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை ‘தாருல் ஹர்ப்’ ஆகப் பிரகடனம் செய்தார்.

ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் ‘பத்வா’ எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.

அஞ்சாத புலி ஹைதர் அலி:

18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

தீரன் திப்பு சுல்தான்:

‘மைசூர் புலி’ திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் ‘முடியாது’ என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரைக் கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.

தென்னாட்டு வேங்கைகள்:

தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது.

ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்திய விடுதலைக்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

இஸ்லாம் எந்த நிலையிலும் தற்கொலை செய்வதை அனுமதிக்கவில்லை. முற்றிப் போன தேசபக்தியால் இப்படி தற்கொலை செய்தவர்களும் இருந்தனர் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர்.

முஃப்தீ இனாயத் அஹ்மது:

தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ஆம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின.

இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ‘நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?’ என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

‘ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்’ என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறுவேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசைப் பெற்றான்.

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.

அன்றும் ஒரு பொடோ:

இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது ‘ரௌலட் சட்டம்’. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். ‘கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது’ என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். ‘எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்’ என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மனசாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. ‘நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்’ என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று ‘லப்பைக் லப்பைக்’ என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

முஹம்மதலி, ஷௌகத் அலி, அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர். கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.

சிலையை உடைத்த சீலர்:

தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், ‘மேடை முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். ‘மேடை முதலாளி’ அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.

கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.

ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.

பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.

பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.

சிங்கை சிங்கம்:

1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர். 1915ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லா, இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915ம் ஆண்டு மார்ச் மாதம் 23 அன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் கப்பல் வாங்குவதற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவியவர் தொழிலதிபர் பக்கீர் முகமது ராவுத்தர்.
வெள்ளையனுக்கு எதிராகவும் , காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர் அப்துல் கலாம் ஆசாத்.

நேதாஜியின் ராணுவ படைக்கு அன்றே ஒரு கோடி ரூபாய் வழங்கிய விடுதலைப் போராளி வள்ளல் ஹபீப் முஹம்மத:

இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உன் தியாகத்தால் உதித்தது பகதூர்ஷாவின் கல்லறையில் ராஜீவ் காந்தி எழுதிய வாசகம்.

கொடிகாத்த குமரன் உன்னோடு சேர்ந்து கொடியை பிடித்து சிறை சென்ற முஸ்லிம்கள் அப்துல் லத்தீப், அக்பர் அலி , மைதீன்கான் . அப்துல் லத்தீப் , அப்துல் ரஹீம், வாவு சாகிப் , ஷேக் பாபா சாகிப்

நேதாஜி ராணுவ படை தளபதி ஷாநவாஸ் கான்.

ஆங்கிலேயருக்கு எதிராக காந்தியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் 19 பேரில் 10 பேர் முஸ்லிம்கள்.

நேதாஜி அமைத்த மந்திரிசபையில் 19 பேரில் 5 பேர் முஸ்லிம்கள் .

ஆங்கிலேயருக்கு எதிராக போராடி தன்னுடைய இருபத்தி ஏழாம் வயதில் தூக்கு மேடைக்கு சென்றவர் அஸ்பகுல்லாஸ்கான்

சுதந்திர போராட்டத்தில் பீரங்கிகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை மிரள வைத்த மாவீரன் திப்பு சுல்தான்.

1847 ம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மெளலவி அப்துல்லாஹ் ஷாஷ்

மாவீரன் திப்பு சுல்தான் தலைமையில் இந்திய சுதந்திர போர் நடந்திருந்தால் இந்தியா அன்றே விடுதலை அடைந்து இருக்கும் என்று மகாத்மா காந்தி கூறினார்.

பிரிட்டிஷ் தலைவன் சர் ஹெண்ட்ரி லாரன்சை தன் கையால் சுட்டுக்கொன்று அதற்காக சிறை சென்றவர் பேகம் ஹஜ்ரத் மகால்

சுதந்திரப் போராட்டத்திற்காக 30 லட்சம் ரூபாய் கொடுத்து நாடு விடுதலை பெற போராடிய பெண்மணி அன்னை பீவிமா

வ உ சி கைது செய்த வெள்ளையனிடம் வ உ சி யை விடுதலை செய் என்று போராடி வெள்ளையன் துப்பாக்கி சூட்டால் உயிர் நீத்தவர் முகமது யாசின்

வெள்ளையனுக்கு எதிராக பள்ளிவாசலில் பிரச்சாரம் செய்ததால் பள்ளிவாசலில் புகுந்து பல முஸ்லிம்களை சுட்டு தள்ளினான் வெள்ளையன் இன்று சுவற்றில் காய்ந்த ரத்தக்கரை உள்ளது ஹனி பள்ளிவாசல் (உத்திரப்பிரதேசம்)

இந்திய முதல் விடுதலைப்போர் சிப்பாய் கலகத்தின் போரை தலைமையேற்று நடத்தியவர் மெளலவி அகமதுல்லா ஷா. இதில் இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள்

வெள்ளையனை விரட்டி அடிக்க அவன் கொடுத்த கான் சாகிப் , ஷம்சுல் உலமா என்ற பட்டங்களை தூக்கி வீசினார்கள் முஸ்லிம் தலைவர்கள்.

வெள்ளையனுக்கு எதிராக 7 வருடம் தொடர் போர் செய்து வெள்ளையர்களின் சாம்ராஜ்ஜியத்தின் மிரள வைத்தவன் மாவீரன் மருதநாயகம்

வெள்ளையன் சுதந்திரம் கொடுக்கும் போது அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் அபுல் கலாம் ஆசாத் ,ஜனாப் ஜின்னா , நவாப் ஆப் பிகார்

முஸ்லிம்கள் வெள்ளையனை விரட்டுவதற்காக ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார்கள். இதன் விளைவால் 50 வருடம் பின்னோக்கி சென்றது இஸ்லாமிய சமுதாயம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு அவர்களது விகிதாச்சாரத்தை விட அதிகம் என்று குஷ்வந்த் சிங் வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் கூறினார்.

இப்படி இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.

இந்தியர்களின் விழிப்புணர்வை தாக்குப் பிடிக்க முடியாமல் தானாகவே முன்வந்து சுதந்திரம் கொடுத்தனர் ஆங்கிலேயர்கள்.சுதந்திரம் பெறும் பொழுது எத்தனை உயிர்களை இழந்திருப்போம்? எத்தனை வளங்களை வாரிக் கொடுத்திருப்போம்.. எதற்காக.. இன்றைய சமுதாயம் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக.

நம் சுதந்திரம் நம்கைகளில் தான் இருக்கிறது. நம் எண்ணமே நம் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் அடிப்படையாய்த் திகழ்கிறது. நம்மில் ஏற்படும் பயம் மட்டுமே நம் சாதனையை தடுத்து நிறுத்துகிறது. எத்தனை சவால்கள் நம்மைச் சூழ்ந்து இருந்தாலும், அத்தனையும் தகர்த்தெறியும் ஆயுதம்தான் நம் எண்ணம்.

வாழும் ஒவ்வொரு நிமிடமும் நமது செயல்களால் சுற்றுப்புறச் சூழலை வளமாக்குவோம். நாம் யார் என்பதை அறிந்து கொண்டால் உலகம் நமக்கு சாதகமாகும். உலக அறிவை நமக்குக் கொடுக்க காற்றிலுள்ள அலைகளும் தயாராகவே இருக்கின்றன. இயற்கை என்றும் நம் சுதந்திரத்திற்கு சாதகமாகவே இருக்கிறது. நம் சுதந்திரத்தையும் நாம் பெற்ற சுதந்திரத்தையும் பேணி காப்போம். இந்த இனிய நாளில் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…..

சிறப்பு தொகுப்பு நன்றிகளுடன்..

ஆசிரியர்கள், நிருபர்கள், அலுவலக நிருபர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திப் பிரிவு, வாகன ஓட்டுனர்கள் அனைவரின் சார்பாக ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *