துபாய் ஆகஸ்ட், 14
துபாய் நகரில் ஹூத் ஹத்தாத் என்ற 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் குடியிருப்பு ஒன்றில் உள்ளார். அவர் தனது பிறந்த நாள் அன்று காவல் உடை அணிந்து காவலர் போல் இருக்க வேண்டும் என பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார்.
இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் தங்களது மகளின் விருப்பத்தை காவல் தலைமையகத்துக்கு இ-மெயில் மூலம் அனுப்பினர்.
இதனைப் பார்த்த அதிகாரிகள் சிறுமியின் பிறந்த நாள் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தனர்.
இதையடுத்து சிறுமியின் பிறந்தநாளான நேற்று காவல்துறை அலுவலகத்துக்கு சீருடையில் வந்தார். அவரை காவல் அதிகாரிகள் வரவேற்று பூங்கொத்து வழங்கினர். மேலும் பிறந்த நாளையொட்டி சிறுமிக்கு பரிசு அளித்து, காவல் அதிகாரி இருக்கையில் அமர வைத்த மகிழ்ச்சிப்படுத்தினர்.
தொடர்ந்து சிறுமி காவலர்கள் பயன்படுத்தும் சொகுசு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். நகரின் பல பகுதிகளுக்கு காரில் வலம் வந்தார். இதன் காரணமாக சிறுமி மிகவும் சந்தோஷமாக இருந்தார்.
தனது பிறந்த நாள் ஆசையை நிறைவேற்றிய துபாய் அரசாங்கம் மற்றும் போலீசாருக்கு அந்த சிறுமியும், அவரது பெற்றோரும் நன்றி தெரிவித்தனர்.