கடலூர் ஜன, 20
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. மாநில மேலிட பார்வையாளர் ரவி தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, பொருளாதார பிரிவு மாநில தலைவரும், அன்னை பாத்திமா கல்வி நிறுவனங்களின் குழும தலைவருமான எம்.எஸ்.ஷா, இசை அமைப்பாளர் கங்கையமரன் மற்றும் மாநில பார்வையாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும் மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி கடலூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக கடலூர் வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.