கோயம்புத்தூர் ஜன, 20
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது அங்குள்ள பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில நேரங்களில் வனவிலங்கு -மனித மோதல் நடை பெற்று வருகிறது. எனவே காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நேற்று மாலை 5 மணியளவில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான மயில்சாமி என்பவர் ஆட்டுக்கு இலை, தழைகளை பறிக்க கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் சென்றார். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி செல்ல முயன்றார். ஆனால் அந்த காட்டு யானை அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கியது.
மேலும் காட்டு யானை மிதித்ததில் மயில்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத் துறையின ருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.