Spread the love

கள்ளக்குறிச்சி டிச, 18

திருக்கோவிலூர் திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் வக்கீல் புதுப்பாளையம் திருச்செல்வன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 100 பேர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகப்பெரும் வறட்சியை சந்திக்க வேண்டிய ஒரு அபாயமான சூழ்நிலை உருவாகும். அதோடு விவசாயத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். தற்போது மணல் குவாரி அமைய உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் மணல் குவாரி செயல்படக்கூடாது என கடந்த அக்டோபர் மாதம் தடை சான்றிதழும் வழங்கி உள்ளது.

மேலும் மணல் குவாரி அமையும் இடங்களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் மழை வெள்ளம் ஏற்படும்போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. எனவே உயிரிழப்புகளை தடுக்கவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும், மணல் குவாரியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மோகன் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *