விழுப்புரம் செப், 23
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி அடுத்த வெங்கமூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று மதியம் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. அந்த சத்து மாத்திரையை மாணவ-மாணவிகள் பள்ளியிலேயே சாப்பிட்டனர்.
இதையடுத்து சத்து மாத்திரைகளை சாப்பிட்ட வெங்கமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மஞ்சுளா, அர்ச்சனா, காவியா, ராகவி, புவனேஸ்வரி, மகாலட்சுமி உள்ளிட்ட 31 மாணவ, மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் காணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் மயக்கமடைந்த 31 மாணவர்களையும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் காட்டுத்தீ போல் வெங்கமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பரவியது.
இதையறிந்து பதறிய வெங்கமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே மேற்கண்ட சம்பவத்தை அறிந்த மாவட்ட ஆட்சியர் மோகன், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, திமுக ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் வாசுகி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் வந்து கல்லூரி முதல்வர் குந்தவி தேவியிடம் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டதோடு, சிகிச்சை பெற்ற மாணவர்களிடம் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினர்.