Spread the love

பெரம்பலூர் செப், 10

பெரம்பலூர் மாவட்டம் கலரம்பட்டி மூன்றாவது வார்டுக்குட்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் அரசு பேருந்து ஓட்டுனர். இவரது மனைவி தனலட்சுமி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று கலரம்பட்டி காட்டுப்பகுதியில் எட்டு ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில் அடைப்பதற்காக தனலட்சுமி மாலை ஆடுகளை ஓட்டி வந்தார். அப்போது பெரம்பலூர் துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆடுகளை ஓட்டி வந்த போது எதிரே வந்த சிமெண்ட் பல்கர் லாரி ஆடுகள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் ஏழு ஆடுகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தன. ஒரு ஆடு படுக்காயம் அடைந்தது. இந்த தகவல் அந்த கிராம மக்களிடையே வேகமாக பரவியது.

மேலும் ஆடுகளை இழந்த தனலட்சுமி மற்றும் அவருடன் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து இறந்த ஆடுகளை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினரும், பெரம்பலூர் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஆடுகள் மீது மோதி விட்டு சென்ற லாரியை பிடித்து அதன் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *