சேலம் ஆக, 30
அயோத்தியாப்பட்டணம் அன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் . இவர், நேற்று இரவு சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது, கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் பகுதியில் இரவு 9.45 மணியளவில் கார் வந்தபோது திடீரென என்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன், காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். ஆனால் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சித்துராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விஜயகுமார், பிரகாஷ், வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காரில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கொண்டலாம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.