கடலூர் ஆகஸ்ட், 23
விநாயகர் சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். துணைக் காவல் கண்காணிப்பாளர் கரிகால்பாரிசங்கர் முன்னிலை வகித்தார். இதில் காவல் ஆய்வாளர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் மற்றும் காவல்துறையினர், விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உரையாற்றுகையில், விநாயகர் சிலையை 10 அடிக்கு மேல் அமைக்கக்கூடாது. விநாயகர் சிலை நிறுவ கோட்டாட்சியர், காவல்துறையினர், தீயணைப்பு துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். சிலை வைத்த 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். மாட்டு வண்டிகளில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது. பெரிய சிலைகளை 4 சக்கர வாகனங்களில் தான் எடுத்து வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் சிலைகளை கரைக்க வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற விதிகளை பின்பற்ற உத்தரவிட்டார்.