திண்டுக்கல் ஆகஸ்ட், 22
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் முடிவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த சில வாரங்களாக சற்று குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 19 ம்தேதி கிருஷ்ணஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.
இதன் காரணமாக சீசன் முடிந்த நிலையிலும் கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் கடந்த 3 நாட்களாக களை கட்டின. படகு சவாரி குறிப்பாக மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட இருமடங்கு அதிகரித்து இருந்தது. அங்கு ஜிப் லைன் எனப்படும் கயிறு தொங்கும் விளையாட்டு, பரிசல் சவாரி ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் உற்சாகமுடன் மேற்கொண்டு பொழுதை கழித்தனர்.