Spread the love

வேலூர் ஆகஸ்ட், 17

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் கடந்தசில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும் பேரணாம்பட்டு நகராட்சிக்கு குப்பை கிடங்கு இல்லாததால் கடந்த ஒரு மாதமாக நகரின் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன.

மேலும் வீடுகளிலும் குப்பைகள் வாங்கப்படுவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. கடந்த 10 நாட்களாக பேரணாம்பட்டு நகரில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

அவர்களில் சுமார் 20 முதல் 30 பேர் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைகளிலும், ரேஷன் கடை போன்று நோயாளிகள் வரிசையில் மணிக்கணக்கில் நின்று சிகிச்சை பெற்று செல்லும் அவல நிலையை தினமும் காண முடிகிறது.

எனவே தேங்கியுள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து டெங்கு காய்ச்சல் தடுத்திட நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *