தர்மபுரி ஆகஸ்ட், 14
அன்னசாகரம் ஏரியில் இருந்து விவசாயிகளுக்கு களிமண் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. சில விவசாயிகள் ஏரியில் இருந்து களிமண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தினர். சிலர் அனுமதி பெறாமல் ஏரியில் உள்ள நொரம்பு மண்ணை அள்ளி விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஏரியில் மண் அள்ளுவதை அறிந்த அன்னசாகரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 லாரிகளை சிறைபிடித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணனிடம் ஒப்படைத்தனர். இந்த லாரிகளையும் கிராம நிர்வாக அலுவலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதிகோன்பாளையம் காவல்துறையில் புகார் செய்தனர். அதற்குள் அந்த 3 லாரிகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து எடுத்து சென்று விட்டனர். இது குறித்து காவலர்கள் லாரிகளின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.