Spread the love

சென்னை பிப், 19

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ம் தேதி பிறந்தார். இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். இவர் 1984ஆம் ஆண்டு தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து இவர் 1988 ஆம் ஆண்டு என் தங்கச்சி படிச்சவ, அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பினனர் ரஜினிகாந்துடன் பணக்காரன், உழைப்பாளி படத்திலும் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் வெற்றி விழா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

விஜயகாந்துடன் சின்னகவுண்டர், சத்யராஜுடன் வால்டர் வெற்றிவேல் படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய்யுடன் கில்லி, அஜித்துடன் ஆசை, வேதாளம், வீரம், விக்ரமுடன் தூள் படத்திலும், ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா படத்திலும் நடித்துள்ளார். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷங்க, லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் கடைசியாக நடித்த படம் உடன்பால் எனும் படம். இவருக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ளது. 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சமூக உணர்வு, சமூக அக்கறை கொண்ட மயில்சாமி கொரோனா காலகட்டத்தில் தனது விருகம்பாக்கம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார்.

அத்துடன் இவர் மர்மதேசம் சீரியலில் நடித்துள்ளார். லொள்ளுப்பா என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அத்துடன் அசத்த போவது யாரு, சிரிப்போ சிரிப்பு நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்தார். இவர் வடிவேல், விவேக் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். இவர் மிமிக்ரி செய்வதில் வல்லவர். கடந்த 2009 ம் ஆண்டு தனது மகன் அருமைநாயகம் திரைப்படங்களில் நடிக்க தயார் என மயில்சாமி அறிவித்திருந்தார். அவருக்கு அன்பு என்ற பெயரையும் மாற்றினார்.

இதையடுத்து ராசு மதுரவனின் பார்த்தோம் பழகினோம் என்ற படத்தில் அன்பு நடித்திருந்தார். 2015 இல் அந்த 60 நாட்கள் படத்திலும் அன்பு நடித்திருந்தார். இவர் சில படங்களில் குரல் கொடுத்துள்ளார். வடிவேலுவுக்கு கஸ்தூரி மஞ்சள் என்ற படத்திலும் , செல்வா படத்தில் மணிவண்ணனுக்கும், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட படங்களில் குரல் கொடுத்துள்ளார்.தமிழ் திரையுலகில் முதன்முறையாக மிமிக்ரி கேசட் வெளியிட்டவர் மயில்சாமிதான் என சொல்லப்படுகிறது.

இத்துணை பிரபலமிக்க நகைச்சுவை நடிகர் மயில்சாமி அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. அவருக்கு நாளை இறுதிச் சடங்குகள நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறப்புக்கு ரமேஷ் கண்ணா, மனோ பாலா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். போரூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மயில்சாமியின் உடலுக்கு டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் மயில்சாமியின் உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்தனர்.

அவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் மழை, புயல் காலங்களில் அவர் மக்களுக்கு செய்த உதவிகளை குறிப்பிட்டு பலரும் கண்கலங்கிஅஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் தனுஷ் வரை அத்தனை நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *