நெய்வேலி ஆகஸ்ட், 11
கடலூர் மாவட்ட பாமக. அவசர ஆலோசனை கூட்டம் என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வடக்கு பாமக. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மேலும் பாமக மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், செல்வமகேஷ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 299 பொறியாளர் பணி நியமனத்தில் தமிழர் ஒருவருக்கு கூட வாய்ப்பு கொடுக்காததை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையின் பேரில் சனிக்கிழமை என்.எல்.சி.ஆர்ச் கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் என்.எல்.சி. நிறுவனத்தில் தொழிலாளர் நியமனத்தில் தமிழர்களுக்கு 100 சதவீதமும், அதிகாரிகள் நியமனத்தில் 50 சதவீதமும், குறிப்பாக வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் மற்றும் சுற்றுப்புறசூழல் மேம்பாட்டு நிதியை நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முழுமையாக செலவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பாமக. மாநில துணைத் தலைவர் முத்து. வைத்திலிங்கம், உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.