திருப்பத்தூர் டிச, 17
வாணியம்பாடி அடுத்த அம்பலூர் அருகே உள்ள அழிஞ்சி குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இதில் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனித்தனியாக கூரையால் அமைக்கப்பட்ட செட் அமைத்து கோழிகளை அடைத்து வைத்துள்ளார்.
நேற்று அதிகாலை கோழிப்பண்ணையில் ஒரு செட்டில் திடீரென தீப்பிடித்தது. வேகமாக பற்றிய தீ கூரையில் பிடித்து மளமளவென எரிந்தது. இதனைக் கண்ட ஊழியர்கள் வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வந்தனர். அதற்குள் கொட்டகை முழுவதும் எரிந்தது. அதில் சிக்கிய 300-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியானது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.