கன்னியாகுமரி நவ, 30
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை சுற்றுலா பயணிகளின் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் ஆகும். திருவள்ளுவர் சிலை நடுக்கடலில் நிறுவப்பட்டுள்ளதால் உப்பு காற்றால் பாதிக்கப்படுவதால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அதன் மேல் ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 6 ம் தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் ஆரம்பமானது. தற்போது 80 சதவீத அளவு நிறைவடைந்து உள்ளது. அடுத்த கட்டமாக காகிதகூழ் அகற்றப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை மூலம் சிலை முழுவதுமாக பூசப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 5 ம்தேதிக்குள் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் இடையிடையே பெய்த மழை காரணமாகவும் காற்றின் வேகம் காரணமாகவும் பணிகள் தடைபட்டன. தற்போது 65 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பணி நிறைவு செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்தனர்.