மும்பை நவ, 1
நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.
தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன. அதேபோன்று, ‘டிஜிட்டல் கோட்’ பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது. தனியார் துறையினரும் இதை வெளியிடுகிறார்கள்.
காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.
இந்தநிலையில், இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று வெளியிடுகிறது. சோதனை அடிப்படையில் இந்த கரன்சி வெளியிடப்படுகிறது.
இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.