கள்ளக்குறிச்சி அக், 18
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் 28 பேர் கடந்த 17 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சுங்கச்சாவடி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டிராக் முறையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சுங்கச்சாவடி நிர்வாகம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக வெளிமாநிலத்தில் இருந்து ஊழியர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. எனவே இதனை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட சுங்கச்சாவடி பணியாளர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் வயிற்றில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.