திருவண்ணாமலை அக், 14
தண்டராம்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வேல்முருகன் தனது மகனுக்கு சாதி சான்று கேட்டு காஞ்சிபுரம் வருவாய்த்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் 5 ஆண்டுகளாக சாதி சான்று வழங்கவில்லை.
இதனால் மனமுடைந்த வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றம் முன்பு தீக்குளித்தார். உடனடியாக பாதுகாப்பில் இருந்த காவல் துறையினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கு காரணமான வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு மலைக்குறவர் இன மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்திய பழங்குடியினர் சங்க மாநிலத் தலைவர் பஞ்சநாதன் தலைமை தாங்கினார்.
மேலும் நரிக்குறவர் கூட்டமைப்பு நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் வட்டாட்சியர் பரிமளாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மலைக்குறவர் சங்க நிர்வாகி மாணிக்கம் உள்பட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.