Spread the love

மதுரை செப், 29

இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையின்போது அந்த அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடந்தன. இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, அகில இந்திய இமாம் கவுன்சில் உள்ளிட்ட 9 அமைப்புகளை சட்ட விரோதமான அமைப்பு என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் இந்த அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்தது. மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டம் நடத்தலாம் என காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி மதுரையில் நெல்பேட்டை, கோரிப்பாளையம், காஜிமார் தெரு, தெற்குவாசல், முனிச்சாலை, பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையங்கள், ரெயில்வே நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் நெல்பேட்டை பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியது. அதை தொடர்ந்து அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் அரசு விதித்த தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டனர். ஆனால் யாரும் அங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வரவில்லை. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *