மதுரை செப், 23
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த திசைவீரபாண்டியன், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா, மங்கலம் கிராமத்தில் உள்ள மலட்டாற்று பகுதியில் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக மலட்டாறுதான் உள்ளது. இந்த நிலையில், இங்கு அமைந்துள்ள குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது. இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டம் கடும் வறட்சியான பகுதியாகும். இந்த சூழ்நிலையில் எங்கள் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கனிமவள விதிகளின்படி குவாரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஆனால் இந்த குவாரியில் கேமரா பொருத்தப்படவில்லை. 15 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இது சட்ட விரோதமானது. எனவே கடலாடி தாலுகா, மங்கலம் கிராமம் மலட்டாற்றுப்படுகையில் குவாரி நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இதேபோல ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்குடன் சேர்த்து இதை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள், குவாரி முறைகேடுகளில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தால், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தனர்.