கள்ளக்குறிச்சி செப், 18
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த ஜூலை மாதம் நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது.
அப்போது பள்ளி மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டதோடு, தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இதில் பள்ளி கட்டிடம் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை மறுசீரமைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி நிர்வாகம் அளித்துள்ள கோரிக்கையை பரிசீலனை செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. சீரமைக்க 45 நாட்கள் அனுமதி அதன் அடிப்படையில் காவல் துறையினர், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகளின் கருத்துகளை மாவட்ட நிர்வாகம் கேட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பில் பள்ளி கட்டிடங்களின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 45 நாட்களுக்கு அனுமதி அளித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.