Spread the love

ஈரோடு ஜூலை, 31

2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு- பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது. ஈரோடு-பாலக்காடு ரெயில் ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனுக்கு காலை 11.45 மணிக்கு சென்றது.

இதேபோல் மறுமார்க்கமாக பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7.10 மணிக்கு வந்தடையும். இந்த ரெயில் தினமும் இயக்கப்பட்டு வந்ததால், ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வந்தார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக ரெயில்கள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு பல்வேறு ரெயில்கள் மீண்டும் விடப்பட்டு வந்தன. ஆனால் ஈரோடு-பாலக்காடு ரெயில் இயக்கப்படாமல் இருந்து வந்தது.

இதனால் ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவைக்கு வேலை சென்று வந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் ஈரோடு-பாலக்காடு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. மீண்டும் இயக்கம் இந்தநிலையில் ஈரோடு-பாலக்காடு ரெயில் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பூர், கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு புறப்பட்டு சென்றது. இதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக அனுப்பி வைத்தனர். மேலும், ரெயில்வே நிர்வாகத்துக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாஷா, முகமது அர்சத், ராஜேந்திரன், ஜவஹர்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *