திருவண்ணாமலை ஆகஸ்ட், 19
வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் பதவிக்கு பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கு வேலை கொடுப்பதற்கு பதிலாக சென்னாவரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெண்குன்றம் கிராமத்தில் உள்ள ஒருவருக்கு ஊராட்சி செயலாளர் வேலைக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது
இதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட நந்தினி உறவினர்களுடன் ஊராட்சி மன்ற அலுவலக வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். ஆனால் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட பிருதூர் கிராம மக்கள் பாதிக்கப்பட்ட நந்தினிக்கு ஆதரவாக வந்தவாசி – மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் காவல்துறையினர் வந்து, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி தீர்வு காணப்படும் என்று கூறியதால் சாலைமறியல் கைவிடப்பட்டது.