மதுரை ஆகஸ்ட், 17
தமிழகம் முழுவதும் பல்வேறு மின்சாரத்துறை சார்ந்த திட்டங்களை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் சுமார் ரூ.2.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் மின்மாற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கூடுதல் மின் மாற்றியை ஆய்வு செய்து குத்துவிளக்கு ஏற்றினர்.
இதில் சேடப்பட்டி தொழிற்சங்க தலைவர் ஜெயச்சந்திரன் ஆணையாளர்கள் சோனா பாய், சரஸ்வதி மற்றும் மின்வாரிய துறையை சேர்ந்த உசிலம்பட்டி செயற்பொறியாளர் அழகு மணிமாறன், எழுமலை உதவி செயற்பொறியாளர் சந்திரன், சின்ன கட்டளை உதவி மின் பொறியாளர் சாந்தி, சின்ன கட்டளை ஒன்றிய கவுன்சிலர் வேம்படியான் ஊராட்சி மன்ற தலைவர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.