Spread the love

ஏதென்ஸ் ஆகஸ்ட், 10

துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.

மேலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புதேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 108 பேர் மீட்கப்பட்டதாக ஐநா அகதிகள் அமைப்பு கூறி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *