மதுரை டிச, 9
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். நேற்று காலை தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அவர் நேற்று இரவு மதுரைக்கு வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள, மதுரை மாநகராட்சி பொன்விழா நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து மாநகராட்சி அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்