திருவண்ணாமலை அக், 19
வந்தவாசி பகுதியில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து உதவி ஆட்சியர் அனாமிகா ஆய்வு மேற்கொண்டார். இன்னும் சில நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக வந்தவாசி எள்ளுப்பாறை, சவுரியார் பாளையம், பிருதூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள குடிசைகளை உடனடியாக அகற்று மாறும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டார். மழைக்காலங்களில் குடிசைவாழ் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்தார். வட்டாட்சியர் முருகானந்தம், நகராட்சி கமிஷனர் மங்கையர்கரசன், நகரத் தலைவர் ஜலால், வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் கிருபானந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.