கடலூர் அக், 8
விருத்தாசலம், சாலை மேம்பாட்டு பணிகள் விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கூரைப்பேட்டை- பெரியார் நகரை இணைக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டம் 2020-21 கீழ் பல்லடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.27 கோடி செலவில் தொடங்கி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இதே போல பொன்னேரி பகுதியில் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்ததால் விபத்தை தவிர்க்கும் வகையில் நான்கு வழி சந்திப்பாக மாற்றும் பணி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவிலும், சித்தலூர் புறவழிச்சாலையில் நான்குவழி சந்திப்பில் ரவுண்டனா அமைக்கும் பணி ரூ. 1½ கோடி செலவிலும், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் வரை 500 மீட்டர் தூரத்திற்கு 11 மீட்டர் சாலையை 20 மீட்டராக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் ரூ. ஒரு கோடியே 10 லட்சம் செலவில் நடந்து வருகிறது.
இந்த சாலை மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரந்தாமன், உதவி கோட்ட பொறியாளர் அறிவு களஞ்சியம், உதவி பொறியாளர் விவேகானந்தன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சரவணன் மற்றும் விருத்தாசலம் தாசில்தார் தனபதி, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.