Spread the love

கள்ளக்குறிச்சி செப், 19

சின்னசேலம் அருகே காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் இளங்கோ தலைமை தாங்கி ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகஅளவில் பொதுமக்கள் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து காய்கறி விதைகள், காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகளை அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு வழங்கினார். வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் ஷர்மிளா பாரதி முன்னிலை வகித்தார். இதில் சின்னசேலம் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா, கள அலுவலர் அப்துல் ரகுமான், தலைவாசல் கோழியின நோய் ஆய்வக உதவி பேராசிரியர் தமிழம் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக காளான் வளர்ப்பு, ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள், காய்கறி வகைகள், நாட்டுக்கோழி வளர்ப்பு, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த மூலிகை செடி வளர்ப்பு குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை விவசாயிகள்,அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட்டனர். இதில் சின்னசேலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி மைய ஊழியர்கள், விவசாயிகள், அறிவியல் நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *